புணரியல்
எழுத்துக்களின் புணர்ச்சி இலக்கணத்தைப் பற்றி இவ்வியல் கூறுகிறது. மொழிகள் புணர்தற்குரிய கருவியின் இயல்பு கூறினமையினால் புணரியல் எனப்பட்டது. என்று இளம்பூரணர் கூறுகிறார்.
நிலை மொழியின் இறுதியும் வருமொழியின் முதலும் புணர்ச்சியில் அடைகின்ற இயல்புகளையும் மாற்றங்களையும் எழுத்துச் சாரியைப் பேறுகளையும் மெய்பிரிதாதல் மிகுதல் குன்றல் முதலிய திரிபுகளை இவ்வியல் கூறுகிறது.
நன்னூல்:
உயிரெழுத்துகளையும் மெய்யெழுத்துகளையும் முதலாகவும் இறுதியாகவும் உடைய பகுபதங்களும் பகாப்பதங்களும் தன்னொடு தானும் பிறிதொடு பிறிதுமாய் அல்வழி வேற்றுமைப் பொருளிலாவது பொருந்தும்போது நிலைமொழி வருமொழி இயல்பாகவோ விகாரமாகவோ பொருந்துவது புணர்ச்சி எனப்படும்.
தொல்காப்பியர் புணரியல் ஏழு வகைகளாகக் குறிப்பிடுகிறார்.
1. மொழிமரபின் ஒழிபு
2. மொழிபுணர் இயல்பு
3. வேற்றுமைப் புணர்ச்சி
4. சாரியைப் புணர்ச்சி
5. எழுத்துச் சாரியைகள்
6. உயிரெழுத்தின் புணர்ச்சி இயல்புகள்
7. புணர்ச்சியில் பொருள் வேறுபடுமிடம்
என்று குறிப்பிடுகிறார்.
மொழிமரபின் ஒழிபு:
மொழி முதல் எழுத்துக்கள் 22
மொழி இறுதி எழுத்துக்கள் 24
மெய்முதல் மெய்யீறு
மெய்முதல் உயிரீறு
உயிர் முதல் மெய்யீறு
உயிர் முதல் உயிரீறு
நன்னூல்:
நன்னூலார் இந்த இயல்புகளை பற்றிக் குறிப்பிடவில்லை.
தொல்காப்பியம்:
புணர்ச்சிக்குறிய இருமொழி இயல்பு:
தொல்காப்பியர் புணர்ச்சிக்குறிய இயல்புகளை மெய்யையும் உயிரையும்
இறுதியும் முதலுமாக உடைய மொழிகள் நிலைமொழியும் வருமொழியும் புணரும் முறையை ஏற்படும் மாற்றம்
1. உயிர் முன் உயிர் வருதுல்
2. உயிர் முன் மெய் வருதல்
3. மெய் முன் உயிர் வருதல்
4. மெய் முன் மெய் வருதல்
என நான்காகக் கூறுகிறார்1.அவை புணரும் போது நிலைமொழியை நிறுத்த சொல் என்றும் வருமொழியைக் குறித்துவரு கிளவி என்றும் கூறுகிறார்.
நன்னூல்:
தொல்காப்பியர் குறிப்பிடுவதைப் போன்று நன்னூலாரும் புணர்ச்சிக்குறிய இயல்புகளைக் கூறுகிறார்.
மொழிபுணர் இயல்பு:
தொல் காப்பியர் கூறும் போது ஈறும் முதலும் புணரும் தன்மை பற்றி நான்காக வகைப்படுத்திக் கூறுகிறார். அவற்றின் பெயர்ச்சொல் வினைச்சொல் எனும் சொல்நிலை பற்றி கூறும்போது
1. பெயரொடு பெயர் புணர்தல்
2. பெயரொடு வினை புணர்தல்
3. வினையொடு வினை புணர்தல்
4. வினையொடு பெயர் புணர்தல்
என நான்கு நிலைகளாக கூறுகிறார்2.புணர்ச்சிக்கு பெயர் வினை ஆகிய இரண்டு மட்டுமே கூறப்பட்டுள்ளது. இடை உரி கூறப்படவில்லை.
நன்னூல்:
நன்னூலார் மொழியின் புணர்ச்சி இயல்புகளைப்பற்றி அவர் குறிப்பிடவில்லை.
மூன்று திரிபுகள்:
தொல்காப்பியம்:
தொல்காப்பியர் திரிபுப் புணர்ச்சி பற்றி கூறும் போது
1. மெய்பிறிதாதல்
2. மிகுதல்
3. குன்றல்
என மூவகைப்படுத்துகிறார்.3
நன்னூல் :
நன்னூலார் இதனைப் பற்றி குறிப்பிடும் போது
1. தோன்றல்
2. திரிதல்
3. கெடுதல் என்று குறிப்பிடுகிறார்.4
தொல்காப்பியம்.
சாரியை:
சாரியை பற்றி குறிப்பிடும் போது இன் வற்று அத்து அம் ஒன் ஆன் அக்கு இக்கு அன் எனும் ஒன்பதும் இவைபோல்வன பிறவும் சாரியை ஆகும். இவைபோல்வன என்பதனால் தம் நம் நும் எம் கெழு ஏ ஐ என்பனவற்றை சாரியைகள் என்று இளம்பூரணர் உரையில் கூறுகிறார்.5
நன்னூல்.
சாரியை:
நன்னூலார் கூறும் சாரியைகள் அன் ஆன் இன் அல் அற்று இற்று அத்து அம் தம் நம் நும் ஏ ஆ உ ஐ கு ன ஈறாகக் கூறப் பெற்ற பதினேழும் இவை போல்வன பிறவும் விகுதி பதம் உருபு என்கிற மூன்று புணர்ச்சிகளிலும் தனி மொழிகளிலும் வருதலினால் பொதுவான சாரியைகள் என்று வழங்குகிறார்.6
தொல்காப்பியம்
எழுத்துச் சாரியை:
காரம் கரம் கான் எனும் மூன்றும் எழுத்து சாரியைகள் என வழங்கப்பெறும். கரம் கான் - எனும் இரண்டு சாரியைகளைப் பெற்று வருதல் இல்லை. குறில்கள் கரம் காரம் கான் எனும் மூன்று சாரியைகளையும் ஐ ஒள எனும் இரண்டும் காரம் சாரியை பெறுவதுடன் கான் சாரியையும் பெற்று வருகின்றன என்று கூறுகிறார்.7
நன்னூல்.
எழுத்துச் சாரியை ஓர் எழுத்தின் ஒலி வடிவம் முழுமையாக உணரப்படுவதற்கு துணைசெய்யும் முறையில் அவ்வெழுத்தைச் சார்ந்து இயைந்து வரும்.
அ கரம் காரம் கான் ஆகிய நான்கும் எழுத்துச்சாரியைகளாக வழங்கப்படுகின்றன. ஐ ஓள ஆகிய இரண்டும் காரம் கான் என பெற்று வரும் என்று குறிப்பிடுகின்றார்.8
உயிரெழுத்தின் புணர்ச்சி இயல்புகள்:
தொல்காப்பியர் புள்ளியீற்றுச் சொல்முன் உயிர’ தனித்து நடவாது. தான் தனி நின்ற அவ்வியல்பைக் கெடுத்து அப்புள்ளியோடும் கூடும்.9
நன்னூல்
நன்னூலார் தனித்து நின்ற குற்றைழுத்தை அடுத்து நின்ற மெய் வருமொழி முதலில் உயிர்வந்தால் இரட்டித்து நின்று புணரும் என்று கூறிப்பிடுகிறார்.
தொல்காப்பியம:;
உடம்படுமெய்:
தொல்காப்பியர் உடம்படு மெய் பற்றி கூறும் போது உயிரெழுத்துக்களை இறுதியாக உடைய நிலைமொழியும் உயிரெழுத்துக்களை முதலாக உடைய வருமொழியும் புணரும் போது நலைமொழிக்கும் வருமொழிக்கும் இடையில் ஒரு மெய்யெழுத்துத் தோன்றும். இதனை உடம்படுமெய் என்று குறிப்பிடுகிறார்.10
நன்னூல்:
நன்னூலார் கூறும் போது நிலைமொழியின் ஈற்றில் ஓர் உயிரெழுத்து நின்று வருமொழியின் முதலிலும் ஓர் உயிரெழுத்து வந்தால் அவை இரண்டும் புணரும் புணர்ச்சி உடம்படுமெய் எனப்படும்.
நிலைமொழியின் ஈற்றில் இ ஈ ஐ எனும் மூன்று உயிர்களில் ஏதேனும் ஓர் உயிரெழுத்து நின்று வருமொழி முதலில் ஏதேனும் ஓர் உயிர் வந்தால் அவற்றிற்கு இடையில் ‘ய’ கர உடம்படுமெய்யாகத் தோன்றும்.11
இ ஈ ஐ தவிர்த்து வேறு உயிர் வந்தால் ‘வ’கர உடம்படுமெய் தோன்றும்
நுன்னூலார் மேலும் சிலவற்றை குறிப்பிடுகிறார்.
‘எ’கர வினா விடைச் சொல்லுக்கு முன்னர் உயிரோ ‘ய’கர உயிர்மெய்யோ வந்தால் அவற்றிற்கு இடையில் ‘வ’கர மெய் தோன்றும்.
‘ய’கர உயிர் மெய் தவிர மற்ற உயிர்மெய்கள் வந்தால் அவ்வும் மெய்யில் உள்ள மெய்யெழுத்து மிகும்.
செய்யுளில் சுட்டெழுத்துக்கள் நீண்டு வரும் போது நிலை மொழி வருமொழிக்கு இடையில் ‘ய’கர மெய் தோன்றும் என்று குறிப்பிடுகிறார்.
புணர்ச்சியில் பொருள் வேறுபடும் இடம்: எழுத்தின் தன்மை வேறுபடாமல் பொருள் வேறுபட்டு நிற்கும் புணர்மொழிகள் உள்ளன. ஆவை எடுத்தல் படுத்தல் நலித்தல் என்னும் ஓசை வேறுபாட்டின் காரணமாக பொருள் வேறுபட்டு நிற்கும் சொற்களை உடையனவாம்.12
நன்னூல்.
நன்னூலார் இதனைப் பற்றி பொதுவியலில் கூறியுள்ளார். எழுத்தினது இயல்பு வேறுபடாது பொருள் வேறுபட்டுச் சொல்லும் பொருளும் ஐயப்பட நிற்கும் தொடர்மொழிகள் குறிக்கப்பெற்ற சொற்களின் இறுதியும் முதலும் தோன்ற இசையறுத்துக் கூறும் வகையினால் பொருள் துணியப்படும் என்று புலவோர் கூறுவர். இதனை வழாநிலை என கூறுகின்றார்.13
தொல்காப்பியம்.
வேற்றுமை புணர்ச்சி:
புணர்ச்சிக்குரிய நிலைமொழி வருமொழி ஆகியவற்றை ஈறும் முதலும் புணரும் நிலைமைப்பற்றி நான்காகவும் பெயரும் வினையும் புணரும் இயல்பு பற்றி நான்காகவும் வகைப்படுத்திக் கூறிய தொல்காப்பியர் அவற்றை பொருள் நிலை நோக்கில் 1. வேற்றுமைப் புணர்ச்சி 2. அல்வழிப்புணர்ச்சி என இரண்டாகப் பாகுபடுத்திக் கூறுகின்றார்.
தொல்காப்பியர் வேற்றுமை உருபுகளாக பொருட் புணர்ச்சிக்கு கூறுவன. அவை ஐ ஒடு கு இன் அது கண் என வகைப்படுத்துகிறார்.14
நன்னூல்.
நன்னூலார் வேற்றுமை உருபுகள் இவர் ஒடு என்பதை ஆல் உருபாக மாற்றிக் கூறுகிறார். ஐ ஆல் கு இன் அது கண் என்று குறிப்பிடுகிறார்.வேற்றுமை உறுபுகள் மறைந்தோ வெளிப்பட்டோ புணரும் புணர்ச்சி வேற்றுமைப் புணர்ச்சி எனப்படும்.15
அல்வழிப் புணர்ச்சி:
தொல்காப்பியர் வேற்றுமை அல்வழி என பகுத்துக் கூறுகிறது. ஆனால் எவையெல்லாம் அல்வழி என்று கூறவில்லை.
நன்னூலார் அல்வழிப்
புணர்ச்சியை பதினான்காக குறிப்பிடுகிறார். அவை 1.வினைத்தொகை 2.பண்புத்தொகை
3.உவமைத்தொகை 4.உம்மைத்தொகை 5.அன்மொழித்தொகை 6.எழுவாய்த்தொடர் 7.விளித்தொடர் 8.பெயரெச்சத் தொடர் 9.வினையெச்சத்தொடர் 10.வினைமுற்றுத்தொடர்
11.இடைச்சொற்றொடர் 12.உரிச்சொற்றொடர் 13.தழுவுத்தொடர் 14.அடுக்குத்தொடர் என நன்னூலார் குறிப்பிடுகின்றார்.
0 கருத்துகள்